மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன்: ஓட்டுக்காக இந்தியை எதிர்க்கின்றனர் குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு


மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன்: ஓட்டுக்காக இந்தியை எதிர்க்கின்றனர் குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 24 July 2019 10:45 PM GMT (Updated: 24 July 2019 7:48 PM GMT)

ஓட்டுக்காக இந்தி மொழியை எதிர்க்கின்றனர் என்றும், மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன் என்றும் குன்னம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை சார்பில் பகுதி நேர நூலகத்துக்கான புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக கண்காணிப்பாளர் விஜயன் முன்னிலை வகித்தார். மாவட்ட மைய நூலகர் சந்திரசேகரன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன் (குன்னம்), தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்) ஆகியோர் பகுதி நேர நூலகத்தினை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர். பின்னர் விழாவில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாரும், குன்னம் தொகுதி எம்.எல்.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியதாவது:-

இந்தி திணிப்பை எதிர்க்கும் அதேசமயம் நான் மும்மொழி கொள்கையை வரவேற்கிறேன். 3-வது விருப்ப மொழி வேண்டாம் என சொல்லும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் பலரும் இந்தி படித்து டெல்லியில் எம்.பி, மந்திரி ஆகி நன்றாக உள்ளனர். அதே சமயம் அரசு பள்ளியில் படிக்கக்கூடிய, தனியார் பள்ளியில் சேர்க்க முடியாத மாணவ-மாணவிகள் 3-வதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் தட்டிகழிப்பது அந்த மக்களுக்கு இழைக்கப்படக் கூடிய ஒரு அநீதியாக தான் பார்க்கிறேன்.

இந்தி படிக்கிறார்

இந்த உண்மையை யாராவது பேசமாட்டார்களா? என எதிர்பார்த்து காத்திருந்தேன். எல்லோரும் ஓட்டுக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள். என்கிற வேகம் இருந்துகிட்டே இருக்கும். தயவு செய்து கட்சியின் சார்பில் இந்த கருத்தை பேசவில்லை. எனது மகள் இந்தி படிக்கிறார். என் கட்சி இந்தி வேண்டாம் என சொல்கிறதே என்பதற்காக, நானும் இந்தி வேண்டாம் என கூறினால் அது ஊரை ஏமாற்றும் செயல். மும்மொழி எதிர்ப்பு என பேசி ஓட்டுக்காக மக்களை ஏமாற்றுகின்றனரே என எனது மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு பள்ளி நிகழ்ச்சியில் இதை சொல்ல வேண்டும் என நினைத்திருந்தேன். இப்போது தெரிவித்துவிட்டேன். தமிழை முக்கிய மொழியாக வைத்துக் கொண்டு, மூன்றாவது மொழி ஒன்றை கற்பதால் ஏழை மாணவர்களும் உயர்வதற்கு வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அரணாரை பகுதி நேர நூலகர் தாமரைச்செல்வி, நூலகத்திற்கு அடிமனை வழங்கிய ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரி செல்வராஜ், பள்ளி மாணவ-மாணவிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று பேசி சர்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நூலக கட்டிட திறப்பு விழாவில் மும்மொழி கொள்கையை ஆதரிப்பதாக ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசியது அ.தி.மு.க. கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story