வெம்பாக்கம் அருகே விஷம் குடித்த காதல்ஜோடி: காதலன் சாவு, காதலிக்கு தீவிர சிகிச்சை


வெம்பாக்கம் அருகே விஷம் குடித்த காதல்ஜோடி: காதலன் சாவு, காதலிக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 25 July 2019 10:45 PM GMT (Updated: 25 July 2019 5:30 PM GMT)

வெம்பாக்கம் அருகே காதல்ஜோடி விஷம் குடித்தனர். இதில் காதலன் பரிதாபமாக செத்தார். காதலிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தூசி, 

வெம்பாக்கம் தாலுகா உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அன்னமுத்து. இவரது மகன் சிலம்பரசன் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் மகள் சவுந்தரியா (23). இவர்கள் இருவரும் தூசியை அடுத்த மாங்கால் கூட்ரோட்டில் உள்ள சிப்காட்டில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் சிலம்பரசன், சவுந்தரியா ஆகியோரின் பெற்றோருக்கு தெரியவந்தது. முதலில் பெற்றோர், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பின்னர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து சமாதானம் செய்து சிலம்பரசன், சவுந்தரியா காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.

ஆனால் இவர்கள் இருவரின் திருமணத்திற்கு அவர்களது பெற்றோர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்தை பெற்றோர் நடத்தி வைக்கமாட்டார்களோ என்று சிலம்பரசனும், சவுந்தரியாவும் மனமுடைந்தனர். இதனால் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தங்கள் நிலத்துக்கு சென்ற சிலம்பரசன், சவுந்தரியாவுடன் சேர்ந்து விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக உயிரிழந்தார். சவுந்தரியா மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story