துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் மீது கல்வீச்சு; கார்டு மண்டை உடைந்தது


துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் மீது கல்வீச்சு; கார்டு மண்டை உடைந்தது
x
தினத்தந்தி 26 July 2019 11:54 PM GMT (Updated: 26 July 2019 11:54 PM GMT)

துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் மீது மர்மஆசாமி கல்வீசி தாக்கியதில் கார்டு மண்டை உடைந்தது.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் துறைமுக வழித்தடத்தில் நேற்று மதியம் பன்வெலில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி. நோக்கி மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் மதியம் 12 மணியளவில் வாஷி - மான்கூர்டு இடையே வந்து கொண்டிருந்தது.

அப்போது, தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த யாரோ மர்மஆசாமி மின்சார ரெயிலை நோக்கி வேகமாக கல்லை வீசி தாக்கினார். அந்த கல் மின்சார ரெயிலில் இருந்த கார்டு தலையில் தாக்கியது.

இதில் மண்டை உடைந்து அவருக்கு ரத்தம் சொட்டியது. இதனால் அவர் வேதனை தாங்க முடியாமல் துடித்தார். இதுபற்றி மோட்டார்மேனுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரெயில் மான்கூர்டு வந்ததும் அவர் உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசி தாக்கிய ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

துறைமுக வழித்தடத்தில் விஷமிகள் அடிக்கடி மின்சார ரெயில்கள் மீது கல்வீசி தாக்கி வருகின்றனர். இதில் ஏற்கனவே பயணிகள் பலர் காயம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


Next Story