சுவாமிமலை சமுதாய கூடத்தில் வைத்திருந்த ரூ.5 லட்சம் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் எரிந்து நாசம்


சுவாமிமலை சமுதாய கூடத்தில் வைத்திருந்த ரூ.5 லட்சம் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 27 July 2019 11:15 PM GMT (Updated: 27 July 2019 5:36 PM GMT)

சுவாமிமலை சமுதாய கூடத்தில் பொதுமக்களுக்கு வழங்காமல் வைத்திருந்த விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் ஆகியவை தீயில் எரிந்து நாசம் அடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் அரசுக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம் உள்ளது. இங்கு தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் மொத்தம் 3 ஆயிரம் எண்ணிக்கையில் வழங்காமல் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த மூன்றாண்டுகளாக இவைகள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் அந்த சமுதாய கூடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படுவதால், அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள விலையில்லா பொருட்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என பாபநாசம் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் நினைவூட்டு கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் அந்த இலவச பொருட்கள் அங்கிருந்து எடுத்துச் செல்லப்படவில்லை.

ரூ.5 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்த சமுதாய கூடத்தில் இருந்து புகை வெளியே வந்தது. இதனையடுத்து அந்த சமுதாய கூடத்தின் அருகே வசித்து வருபவர்கள் சமுதாய நல கூடத்தின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது, தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது..

இதையடுத்து பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கும்பகோணம், பாபநாசம் ஆகிய இரண்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை முழுவதுமாக எரிந்து நாசம் அடைந்தது.

போலீசார் விசாரணை

தீ விபத்து ஏற்பட்ட இடத்தினை நேற்று காலை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் வீராசாமி, கும்பகோணம் தாசில்தார் நெடுஞ்செழியன், சுவாமிமலை பேரூராட்சி செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் சுவாமிமலை போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமுதாய கூடத்தில் பொதுமக்களுக்கு 3 ஆண்டு காலமாக வழங்காமல் வைக்கப்பட்டிருந்த விலையில்லா பொருட்களை யாரேனும் தீ வைத்து கொளுத்தினார்களா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story