மொபட் மீது மோட்டார் சைக்கிளை மோதி ரெயில்வே ஊழியரின் மனைவியிடம் தாலிச்சங்கிலி பறிப்பு


மொபட் மீது மோட்டார் சைக்கிளை மோதி ரெயில்வே ஊழியரின் மனைவியிடம் தாலிச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 27 July 2019 10:15 PM GMT (Updated: 27 July 2019 8:29 PM GMT)

பொன்மலையில் மொபட் மீது மோட்டார் சைக்கிளை மோதி ரெயில்வே ஊழியரின் மனைவியிடம் தாலிச்சங்கிலியை பறித்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி பீமநகர் ரெட்டி தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ரெயில்வே ஊழியரான இவரது மனைவி நவமணி (வயது 42). இவரது மகன் பொன் மலையில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் படித்து வருகிறார். நவமணி சம்பவத்தன்று மொபட்டில் தனது மகனை அழைத்து கொண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அவரை பின்தொடர்ந்து வந்தார். பொன்மலை பீட்டர் தேவாலய ரோட்டில் வந்த போது மர்மநபர், நவமணியின் மொபட் மீது மோதினார். மேலும் அவரது கழுத்தில் கிடந்த 6½ பவுன் தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றார். இதனால் சுதாரித்துகொண்ட அவர் தனது தாலிச்சங்கிலியை ஒரு கையால் இறுக பிடித்துக்கொண்டு போராடினார். மர்மநபர் தொடர்ந்து வலுவாக இழுத்தததால் சங்கிலி 3 துண்டாக அறுந்தது. இதில் நிலை குலைந்த நவமணியும், அவரது மகனும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். இதில் நவமணிக்கு தலை மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டது. மகனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

போலீசார் விசாரணை

இந்த சம்பவத்தில் திருடனிடம் 2 கிராம் தங்க சங்கிலி மட்டும் பறிபோனது. காயமடைந்த நவமணி சிகிச்சைக்காக திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீஸ் நிலையத்தில் நவமணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். 

Next Story