பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 27 July 2019 11:43 PM GMT (Updated: 27 July 2019 11:43 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடமான கல்யாண்-தானே இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) விரைவு வழித்தடத்தில் காலை 11.40 மணி முதல் பிற்பகல் 3.50 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

எனவே காலை 10.54 மணி முதல் பிற்பகல் 3.52 மணி வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் கல்யாண்-தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் கல்யாண்-தானே இடையே உள்ள அனைத்து ரெயில்நிலையங்களிலும் நின்று செல்லும். தானேக்கு பிறகு மீண்டும் விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி.-சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே இன்று காலை 11.40 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும், காலை 9.53 மணி முதல் மதியம் 2.44 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது.

இதேபோல் காலை 9.56 மணி முதல் மாலை 4.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, கோரேகாவுக்கும், காலை 10.45 மணி முதல் 4.58 மணி வரை பாந்திரா, கோரோகாவிலிருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது. இந்த நேரத்தில் பன்வெல் - குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வேயில் பயந்தர் - வசாய் ரோடு இடையே இன்று காலை 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை விரைவு வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் பயந்தர்-வசாய் ரோடு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த வழித்தடத்தில் ஒரு சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story