மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 28 July 2019 9:45 PM GMT (Updated: 28 July 2019 8:37 PM GMT)

சேலம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

சேலம்,

தமிழக அரசு நிலத்தடிநீரை சேமித்திட மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அனைத்து இடங்களிலும் அமைத்திட தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைத்தொடர்ந்து எடப்பாடி நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு உறுதிமொழி ஏற்பு, விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பின்னர் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் (பொறுப்பு) நிர்மலா தலை மை தாங்கினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இதில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துப்புரவு ஆய்வாளர்கள் தங்கவேலு, முருகன், ஜான்விக்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

மேச்சேரி சிறப்பு நிலை பேரூராட்சியில் ஜல்சக்தி அபியான் திட்டம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் பேரூராட்சியின் செயல் அலுவலர் ஜலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஊர்வலம் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி, பத்ரகாளியம்மன் கோவில் வழியாக சேலம் ரோடு, பஸ் நிலையம், தர்மபுரி ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தில் மேச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். சாலைகளில் சென்ற பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்தவர்களுக்கும் மழைநீர் சேகரிப்பு குறித்த துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.

தலைவாசலை அடுத்த வீரகனூர் பேரூராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை வீரகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் வீரகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் வீரகனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வீரகனூர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Next Story