தாராவி 90 அடி சாலையில் மின்சார பெட்டி தீப்பிடித்து எரிந்தது கடை, வீடுகள் தப்பின


தாராவி  90 அடி சாலையில் மின்சார பெட்டி தீப்பிடித்து எரிந்தது கடை, வீடுகள் தப்பின
x
தினத்தந்தி 28 July 2019 11:00 PM GMT (Updated: 28 July 2019 8:39 PM GMT)

தாராவி 90 அடி சாலையில் மின்சார பெட்டி தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் அங்கிருந்த கடை, வீடுகள் தப்பின.

மும்பை,

மும்பை தாராவி 90 அடி சாலை சாய்பாபா நகர் பகுதியில் ஒரு மின்சார பெட்டி உள்ளது. நேற்று காலை 11 மணியளவில் திடீரென மின்கசிவு காரணமாக இந்த மின்சார பெட்டி தீப்பிடித்து எரிய தொடங்கியது. பெட்டியில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. மேலும் மின்வயர்களும் கொழுந்து விட்டு எரிந்தன.

இதன் காரணமாக 90 அடி சாலை பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பலர் அங்கு திரண்டனர். அவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மண்ணை அள்ளி அந்த பெட்டி மீது வீசி தீயை அணைத்தனர். தீப்பிடித்த மின்சார பெட்டியையொட்டி கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. மின்சார பெட்டிக்குள் இருந்து தீ வெளியே பரவாததால் அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் இருந்து அவைகள் தப்பின.

மின்சார பெட்டி தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக அந்த பகுதியில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.

Next Story