கொழும்பு, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.61 லட்சம் தங்கம் சிக்கியது 4 பேரிடம் விசாரணை


கொழும்பு, துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.61 லட்சம் தங்கம் சிக்கியது 4 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 28 July 2019 10:15 PM GMT (Updated: 28 July 2019 9:07 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் கொழும்பு, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.61 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இது தொடர்பாக 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள், விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சையத் அபுதாகீர் (வயது 34), சுக்கூர் (33) ஆகியோர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், 2 பேரையும் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் பழைய மடிக்கணினிகள் இருந்தன. பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் இருவரும் தங்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.30 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 844 கிராம் தங்கத்தையும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த கும்பகோணத்தை சேர்ந்த முகமது தன்வீர் (25) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள 525 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுல் அமீது பாதுஷா (37) என்பவரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 326 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் 4 பேரிடம் இருந்து ரூ.61 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 695 கிராம் தங்கமும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பழைய மடிக்கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story