சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


சுதந்திர தினவிழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 28 July 2019 10:30 PM GMT (Updated: 29 July 2019 12:30 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினார்.

விழுப்புரம், 

நாட்டின் 73-வது சுதந்திர தின விழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக அனைத்துதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் அம்புரோஸியா நேவிஸ்மேரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மஞ்சுளா, பிரபாகரன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சுகந்தி, துணை இயக்குனர் பாலுசாமி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர். கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

சுதந்திர தின விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் செய்திட வேண்டும். அன்றைய தினம் அனைத்துத்துறைகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட பட்டியல் தயார் செய்ய வேண்டும்.

விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். கொடியேற்று விழா, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை பொதுமக்கள் கண்டுகளிப்பதற்கு வசதியாக மைதானத்தை சுற்றிலும் சாமியானா பந்தல் மற்றும் நாற்காலிகள் அமைக்க வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் கண் பரிசோதனை முகாம் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம் போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story