ராமநத்தத்தில், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு


ராமநத்தத்தில், டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 29 July 2019 10:15 PM GMT (Updated: 29 July 2019 8:54 PM GMT)

ராமநத்தத்தில் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநத்தம்,

ராமநத்தத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் இரவு கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று காலையில் கடையை திறப்பதற்காக வந்தனர். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் கடை ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கல்லா பெட்டியை பார்த்துள்ளனர். அதில் பணம் இல்லாததால் அவர்கள் கடையில் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் தண்ணீர் கேனை எடுத்து கடைக்கு வெளியே வைத்து மது அருந்தியுள்ளனர். மேலும் கடையில் இருந்த 5-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிச்சென்றிருப்பதும் தெரியவந்தது. இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் கீழ்கல் பூண்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் திருட முயன்றனர். அப்போது அந்த வழியாக ஆட்கள் வந்ததை அறிந்த அவர்கள், அங்கிருந்து தப்பிச்சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாகவும் ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநத்தம் அருகே அடகு கடையில் 100 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள், டாஸ்மாக் கடையில் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story