பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நாளை மருத்துவ முகாம் நடக்கிறது


பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நாளை மருத்துவ முகாம் நடக்கிறது
x
தினத்தந்தி 30 July 2019 10:45 PM GMT (Updated: 30 July 2019 7:15 PM GMT)

பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் வட்டார வள மையம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளி குழந்தைகளை உள்ளடக்கிய கல்வி திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலத்திற்கு வட்டார மேற்பார்வையாளர் தேவகி தலைமை தாங்கினார். பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்தை, பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை பள்ளியில் சேர்ப்போம், தடுப்பூசிகளை தவறாமல் போடுவோம், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை ஒதுக்கக்கூடாது, மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான உரிமைகளை வழங்குவோம் போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த ஊர்வலம் ரோவர் ஆர்ச் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவ- மாணவிகளும், மாற்றுத்திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டனர். இதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், பெரம்பலூர் வட்டார வள மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி, சிறப்பு ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்....

ஊர்வலத்தை தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன் நிருபர்களிடம் கூறுகையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (வியாழக்கிழமை) பிறப்பு முதல் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாமில் சிறப்பு டாக்டர்களான எலும்பு முறிவு சிகிச்சை டாக்டர், மனநல டாக்டர், காது மூக்கு தொண்டை டாக்டர், கண் டாக்டர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளை கண்டறிந்து தேர்வு செய்யவுள்ளனர். எனவே மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை நகல் அல்லது புதிய குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் ஊனம் தெரியும்படியான பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4 ஆகியவற்றுடன் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடை யலாம் என்றார்.


Next Story