கனமழையால் கல்வாவில் நிலச்சரிவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தை-மகன் பலி


கனமழையால் கல்வாவில் நிலச்சரிவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தை-மகன் பலி
x
தினத்தந்தி 30 July 2019 11:30 PM GMT (Updated: 30 July 2019 10:20 PM GMT)

கனமழையின் காரணமாக கல்வா மலையடி வாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தானே, 

கனமழையின் காரணமாக கல்வா மலையடி வாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நிலச்சரிவு

தானே கல்வாவில் உள்ள மலை அடிவாரத்தில் குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு அவர்கள் தங்கள் வீடுகளில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கனமழையின் காரணமாக திடீரென மலையடிவாரத்தில் நிலச்சரிவுஏற்பட்டது.

கல், மண் சரிந்து அங்குள்ள குடிசை வீடு ஒன்றின் மீது விழுந்தது. இந்த நிலச்சரிவில் குடிசை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பிரேந்திர ஜெய்ஸ்வால்(வயது40), அவரது மனைவி நீலம், மகன் சன்னி(10) ஆகியோர் சிக்கிக்கொண்டனர்.

இதற்கிடையே சத்தம்கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்தனர். உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கிய 3 பேரையும் மீட்டனர்.

தந்தை-மகன் சாவு

உடனடியாக அவர்கள் அருகில்உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பிரேந்திர ஜெய்ஸ்வால், சன்னி ஆகியோர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த நீலத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே போலீசார் தந்தை, மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், அங்கு வசித்து வரும் குடிசை மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டனர்.

மும்பை மலாடில் அண்மையில் கனமழையின் காரணமாக மலையடிவாரத்தில் சுவர் இடிந்து 31 பேர் வரை உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Next Story