கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொன்று உடலை சாக்கடையில் வீசிய பெண் உள்பட 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்


கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொன்று உடலை சாக்கடையில் வீசிய பெண் உள்பட 3 பேர் கைது பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 30 July 2019 11:00 PM GMT (Updated: 30 July 2019 10:26 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொன்று, உடலை சாக்கடையில் வீசிய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வசாய், 

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை கொன்று, உடலை சாக்கடையில் வீசிய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாலிபர் கொலை

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவில் உள்ள கழிமுக கால்வாய் சாக்கடையில் கடந்த மாதம் வாலிபர் ஒருவர், தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், கொலை செய்யப்பட்டவர் நாலச்சோப்ரா பகுதியை சேர்ந்த கிருஷ்ணா (வயது28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணாவின் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்றனர். அப்போது, அவரது மனைவி ஜோதி தலைமறைவானது தெரியவந்தது.

கள்ளக்காதல்

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜோதிக்கும், அதே பகுதியை சேர்ந்த முக்தார் அலி என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜோதியின் செல்போன் எண் இருக்கும் இடத்தை ஆராய்ந்தனர். இதில், அவர் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி சென்ற போலீசார் ஜோதி மற்றும் அவரது கள்ளக்காதலன் முக்தார் அலியை பிடித்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் தான் கிருஷ்ணாவை கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

3 பேர் கைது

ஜோதிக்கும், முக்தார் அலிக்கும் கள்ளக்காதல் இருப்பது கிருஷ்ணாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் மனைவியை அடிக்கடி கண்டித்து உள்ளார். இது குறித்து ஜோதி தனது கள்ளக்காதலனிடம் கூறி உள்ளார். இதனால் கிருஷ்ணாவை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதற்காக முக்தார் அலி தனது நண்பர் சூரஜ் என்பவரையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று ஜோதியின் வீட்டுக்கு வந்த கள்ளக்காதலன் முக்தார் அலி, கிருஷ்ணாவை சுத்தியலால் தலையில் பலமாக தாக்கினார். இதில், பலத்த காயம் அடைந்த கிருஷ்ணா சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கிருஷ்ணாவின் உடலை அங்குள்ள கழிமுக கால்வாயில், நண்பர் சூரஜ் உதவியுடன் வீசிவிட்டு தப்பிஓடிவிட்டனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தன.

இதைத்தொடர்ந்து போலீசார் ஜோதி, அவரது கள்ளக்காதலன் முக்தார் அலி, நண்பர் சூரஜ் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story