சூளகிரி அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சூளகிரி அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 30 July 2019 11:17 PM GMT (Updated: 30 July 2019 11:17 PM GMT)

சூளகிரி அருகே சீராக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் மாரண்டபள்ளி ஊராட்சிக்குட்பட்டது கட்டிகானபள்ளி கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கிராமத்தில் உள்ள போர்வெல் பழுதடைந்து கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்காததை கண்டித்து கிராம மக்கள் 50 பேர், காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்த சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபராஜ் சாமுவேல், விமல் ரவிக்குமார் மற்றும் சூளகிரி போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

மேலும், விரைவில் புதிய போர்வெல் அமைத்து சீரான குடிநீர் வினியோகம் செய்யவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story