கயத்தாறு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை


கயத்தாறு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 31 July 2019 9:45 PM GMT (Updated: 31 July 2019 7:31 PM GMT)

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கயத்தாறு தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கயத்தாறு, 

தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வீர பெருமாள் தலைமையில், கயத்தாறு இந்திரா நகர், ராஜீவ் நகர் பகுதி மக்கள் நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், தாசில்தார் பாஸ்கரனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், தங்களது பகுதியில் குடிநீர், வாறுகால், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

மேலும் தங்களது பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தில் நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர், நகர பஞ்சாயத்துகளின் நிர்வாக இயக்குனர், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் கையெழுத்திட மறுக்கின்றனர். மேலும் அவர்கள், சாதியின் பெயரை கூறி மாணவர்களை அவதூறாக பேசுகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுவை பெற்று கொண்ட தாசில்தார் பாஸ்கரன், இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story