ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: கைதான 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன் நாமக்கல் கோர்ட்டு உத்தரவு


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: கைதான 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன் நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Aug 2019 11:00 PM GMT (Updated: 1 Aug 2019 6:33 PM GMT)

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நாமக்கல் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் (நர்சு) அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், டிரைவர் நந்தகுமார், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுகலை நிபுணர் ரேகா மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி என 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், முருகேசன், பர்வீன் மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி ஆகியோர் சார்பில் ஜாமீன் கேட்டு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி லதா 7 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு உள்ளார். அதில் மறுஉத்தரவு வரும் வரை தினசரி காலை 10 மணிக்கு சேலம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் அமுதவள்ளி, ரவிச்சந்திரன், முருகேசன் மற்றும் லீலா ஆகியோர் ஜாமீனுக்கான தகுந்த ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ததால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பர்வீன், ஹசீனா மற்றும் அருள்சாமி ஆகிய 3 பேரும் ஆவணங்களை தாக்கல் செய்யாததால் சிறையில் இருந்து இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நந்தகுமார் உள்ளிட்ட 7 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 7 பேரையும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி லதா, 7 பேரின் நீதிமன்ற காவலையும் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து 7 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story