திருச்சி அருகே பரபரப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை சாவு


திருச்சி அருகே பரபரப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை சாவு
x
தினத்தந்தி 3 Aug 2019 11:00 PM GMT (Updated: 3 Aug 2019 5:14 PM GMT)

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை இறந்தது. பிரசவத்தின்போது டாக்டர் இல்லாததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜீயபுரம்,

திருச்சி முக்கொம்பு அருகே வடக்கு புலிவலத்தை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 25) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (22). கர்ப்பிணியான இவர் குழுமணி அரசு மருத்துவமனை, அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் பரிசோதனைக்கு சென்றுவிட்டு பவித்ரா வீடு திரும்பினார். அப்போது இரவு 9 மணி அளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பணியில் இருந்த செவிலியர் ரம்யா இது குறித்து டாக்டர் சுபாவுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த டாக்டர் சுபா, பவித்ராவுக்கு ‘அட்மிஷன்’ போட்டுவிட்டு சென்று விட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பவித்ராவுக்கு அதிகாலை 4.30 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிதுநேரத்தில் குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதாகவும், உடனடியாக அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படியும் உறவினர்களிடம் செவிலியர் ரம்யா கூறினார். உடனே ஜெகதீஸ்வரன் மற்றும் உறவினர்கள் குழந்தையை காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். பின்னர் குழந்தையின் உடலை தூக்கி கொண்டு மீண்டும் அந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்தனர். அங்கு இருந்த செவிலியர் ரம்யாவிடம் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்து விட்டது. பிரசவத்தின்போது டாக்டர் ஏன் வரவில்லை? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். அதன்பிறகு குழந்தையின் உடலை நேற்று காலை 8 மணி அளவில் அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் லெனின் மற்றும் ஜெகதீஸ்வரன் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தாசில்தார் சுப்பிரமணியன், ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், அந்தநல்லூர் வட்டார தலைமை மருத்துவ அதிகாரி லியோ பீமராவ், மாவட்ட தாய்சேய் நல அதிகாரி உஷாரமணி ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது ஜெகதீஸ்வரன் தரப்பினர், “ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டரே இல்லாமல் செவிலியர் பிரசவம் பார்த்துள்ளார். உரிய சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறக்க நேரிட்டது. கடந்த மாதமும் இதேபோல் பெருகமணி அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் குழந்தை இறந்து விட்டது. அப்போது, பிரசவம் போன்ற அவசர காலங்களில் டாக்டர்கள் பணிக்கு வரவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அதன்பிறகும் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகவே அதிகாரிகளின் மெத்தனப்போக்கு காரணமாக தான் குழந்தை இறந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி இனிமேல் பிரசவத்தின்போது டாக்டர்கள் பணியில் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story