ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2019 11:00 PM GMT (Updated: 3 Aug 2019 6:41 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி முத்துப்பேட்டை அருகே இளைஞர் பெருமன்றம் சார்பில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.

முத்துப்பேட்டை,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை முன் வைத்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் தபால் அட்டையினை பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்புவது என்று அறிவித்திருந்தது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களை சந்தித்து 1 லட்சம் தபால்களில் கையெழுத்து பெற்று முழக்கமிட்டு போராட்டம் நடத்தி அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் பரவலாக தபால்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் முத்துப்பேட்டை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் ஒன்றியக்குழுவின் சார்பில் முத்துப்பேட்டை அருகே உள்ள எடையூர் சங்கேந்தி கடைவீதியில் பிரதமருக்கு 1 லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் விக்னேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் துரைஅருள்ராஜன், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகையன் தபால் அனுப்பி தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், உமேஷ்பாபு, குமார், சிவச்சந்திரன், சரவணன், பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story