கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும் நிர்மலா சீதாராமனிடம், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. வலியுறுத்தல்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும் நிர்மலா சீதாராமனிடம், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Aug 2019 11:00 PM GMT (Updated: 3 Aug 2019 7:08 PM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும் என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. வலியுறுத்தினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கஜா புயலால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. புயலில் பல லட்சம் தென்னை மரங்கள் அழிந்தன. வேப்ப மரங்கள், மாமரங்கள், பலா மரங்கள் என ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் விவசாய பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளன.

புயலால் பாதித்த பகுதிகளை கடந்த ஆண்டு ஏற்கனவே பார்வையிட்டு ஆய்வு செய்தீர்கள். அதன் அடிப்படையில் புயல் தொடர்பான நிலைமைகளை நன்கு அறிவீர்கள். புயல் பாதித்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடனை காலம் தாழ்த்தி அளிப்பதற்கான காலக் கெடுவை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இதுபோன்ற சலுகையை சுய உதவிக்குழு கடன், கல்வி கடன் ஆகியவற்றுக்கும் வழங்க வேண்டும்.

தென்னை விவசாயம் மற்றும் பிற விவசாய நடவடிக்கைகளுக்கும், சுய உதவிக்குழுக்களுக்கும், விவசாய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் புதிய கடன்கனை குறைந்த வட்டியில் முன்னணி வங்கிகள் அளிக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மறுவாழ்வுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளை மீண்டும் ஒரு முறை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Next Story