பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரம்


பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரம்
x
தினத்தந்தி 3 Aug 2019 10:15 PM GMT (Updated: 3 Aug 2019 7:21 PM GMT)

விலையில்லா தையல் எந்திரம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கூறினார்.

பெரம்பலூர்,

சமூக நலத்துறையின் மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவாக விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இதர பெண்கள் ஆகியோருக்கு விலை யில்லா தையல் எந்திரம் வழங்குவதற்கு தகுதியான பெண்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதரவற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இதர பெண்கள் அதற்கான உரிய சான்று தாசில்தாரிடமும் பெறப்பட்டது இணைக்க வேண்டும்.

குடும்ப வருமான சான்றிதழ் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். வயது வரம்பு 20 முதல் 40 வயதிற்குள் இருக்கவேண்டும். மேலும் வயது சான்றிதழ் அரசு பள்ளிக்கல்வித்துறை சான்று இருக்கவேண்டும். மேலும், தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட சாதிச் சான்று, தையல் தெரியும் என்பதற்கான சான்று, 2 பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் இணைத்து வருகிற 30-ந் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 6369592466 என்ற செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story