தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாய் - குழந்தை பரிதாப சாவு உறவினர்கள் சாலை மறியல்


தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாய் - குழந்தை பரிதாப சாவு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Aug 2019 11:30 PM GMT (Updated: 4 Aug 2019 5:31 PM GMT)

தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது தாய் - குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு காரணம் டாக்டர்களின் அலட்சியம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி, 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் செங்கோடி பகுதியை சேர்ந்தவர் காந்தி. கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஜோதி (வயது 24). எம்.காம். பட்டதாரி. இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜோதியை நேற்று முன்தினம் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். அன்று இரவு 10.30 மணி அளவில் ஜோதிக்கு திடீர் ரத்த போக்கு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.

இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து ஜோதிக்கு பிறந்த பெண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோதியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் திரண்டனர். தவறான சிகிச்சையால் தாயும், குழந்தையும் இறந்து விட்டதாக கூறி அவர்கள் அங்கிருந்த டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை ஜோதியின் உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஜோதி மற்றும் அவரது குழந்தையின் இறப்பிற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என்றும், தவறான சிகிச்சையால் குழந்தை இறந்து இருவரும் இறந்து விட்டதாக கூறி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று காலை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், தாசில்தார் சுகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகளின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story