ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசு உதவித்தொகை; 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


ஜெருசலேம் புனித பயணம் செல்ல அரசு உதவித்தொகை; 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 4 Aug 2019 11:00 PM GMT (Updated: 4 Aug 2019 9:56 PM GMT)

ஜெருசலேம் புனித பயணம் செல்லும் கிறிஸ்தவர்கள் அரசின் உதவித்தொகை பெற வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் புனித பயணமாக ஜெருசலேம் நாட்டிற்கு செல்ல தமிழக அரசின் சார்பில் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த புனித பயணம் ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த புனித பயணம் வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு(2020) மார்ச் மாதம் வரை பல்வேறு குழுக்களாக மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.

இத்திட்டத்தின்கீழ் 50 கன்னியாஸ்திரிகள் உள்பட 600 பேர் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணம் ஏதும் இல்லாமல் பெறலாம். மேலும் இதுகுறித்து www.bc-m-b-c-mw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன், அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்கள் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு சிறுபான்மையினர், பொருளாதார மேம்பாட்டு கழகம், கலசமகால் பாரம்பரிய கட்டிடம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு வருகிற 15-ந்தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். எனவே மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story