கணவனை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


கணவனை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Aug 2019 10:30 PM GMT (Updated: 5 Aug 2019 6:42 PM GMT)

ஊத்துக்கோட்டையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை சர்ச் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 24). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரம்யா (20). இவர்களுக்கு கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஒரு மாதத்தில், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ரம்யாவின் தாய், தந்தை இறந்துவிட்டதால், அவர் அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரம்யா கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாததால், சந்தேகம் ஏற்பட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது, ரம்யா தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story