திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் அறிவிப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2019 10:45 PM GMT (Updated: 5 Aug 2019 6:52 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைப்பெற சிறுபான்மையினத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-20-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட இருக்கிறது.

இணையதளத்தில் பதிவு செய்ய...

இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ-மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு தகுதியான 1 முதல் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவ-மாணவிகள் வருகின்ற 15-10-2019 வரையிலும், பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் 31-10-2019 வரையிலும் மேற்படி இணையத்தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story