நாகூரில் பிணமாக கிடந்த வாலிபர் ஆற்றில் அமுக்கி கொலை செய்யப்பட்டது அம்பலம் அக்கா கணவர் கைது


நாகூரில் பிணமாக கிடந்த வாலிபர் ஆற்றில் அமுக்கி கொலை செய்யப்பட்டது அம்பலம் அக்கா கணவர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 5:37 PM GMT)

நாகூரில் பிணமாக கிடந்த வாலிபர் ஆற்றில் அமுக்கி கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இந்த கொலை தொடர்பாக அவரது அக்கா கணவரை போலீசார் கைது செய்தனர்.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூர் வெட்டாற்றில் நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஆற்றில் மிதந்த உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இறந்தவரின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் மூலமாக பார்த்த அவரது குடும்பத்தினர் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

இறந்து கிடந்தவர் திட்டச்சேரி அருகே உள்ள கீழகொத்தமங்கலம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிட்டப்பா மகன் கார்த்தி (வயது 33) என்பது தெரிய வந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், இறந்த நபரின் தலையை பிடித்து ஆற்றுக்குள் அமுக்கி கொலை செய்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

திருவாரூர் மாவட்டம் மாங்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன்(34). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயந்தி. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஜெயந்தி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் ஜெயந்தியின் தம்பி கார்த்தியுடன் சேர்ந்து மது குடிப்பதற்காக மகேந்திரன், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினத்திற்கு வந்துள்ளார். அங்கு மதுபாட்டிலை வாங்கிக்கொண்டு இருவரும் நாகூர் வெட்டாற்று பாலத்தின் அருகே அமர்ந்து குடித்துள்ளனர்.

அப்போது மகேந்திரன் தனது மனைவி ஜெயந்தியை தன்வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கார்த்தியிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரன், கார்த்தியின் தலையை பிடித்து ஆற்றில் அமுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து மகேந்திரனை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story