படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, சுய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன் உதவி - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, சுய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் கடன் உதவி - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:30 PM GMT (Updated: 6 Aug 2019 10:37 PM GMT)

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் உதவி வழங்க உள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக வசித்து வரும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான சிறு தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய ரூ.10 லட்சம் வரையிலான வங்கி கடன் உதவி பெறும் வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற (ஆண், பெண் இருபாலரும்) கல்வித்தகுதியாக குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு, 18 வயதுக்கு மேல் 35 வயது வரை இருக்க வேண்டும். பெண்கள், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும்.

இது தவிர, இந்த திட்டத்தில் பயன் பெற மொத்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வங்கி மூலம் கடன் உதவி பெற அதிகபட்சமாக வியாபாரத்துக்கு ரூ.1 லட்சமும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 லட்சமும் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10 லட்சத்துக்கும் பரிந்துரைக்கப்படும். இதற்கான தமிழக அரசு மானியம், திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் ஆகும். அதிகபட்ச மானியம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.

இத்திட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் நேரடி விவசாயம் ஆகியவை செய்ய இயலாது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இதற்கான இணையதள முகவரி http:www.msmeonline.tn.gov.in/uyegp என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நகலினை பதிவிறக்கம் செய்து 2 நகல்களில் தேவைப்படும் அனைத்து ஆவணங்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க, மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை.

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வங்கிகள் மூலம் கடன் உதவி பெற உள்ள பயனாளிகளுக்கு மேற்குறிப்பிட்ட தகுதிகள் இருப்பின் சம்மந்தப்பட்ட பயனாளிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து தமிழக அரசின் மானிய உதவி பெற்று பயன் பெறலாம். வங்கி மேலாளர்கள் தங்கள் வங்கிகள் மூலம் வழங்கும் முத்ரா கடன் திட்டத்திற்கு மானிய உதவி தமிழக அரசின் மூலம் பெறலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். மேலும் விவரங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தை அணுகலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story