சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Aug 2019 11:00 PM GMT (Updated: 7 Aug 2019 5:52 PM GMT)

மீன்சுருட்டியில், சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்த வந்த அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்சுருட்டி,

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குண்டவெளி கிழக்கு கிராமப்பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று காலை மீன்சுருட்டி கடைவீதியில் தனி தாசில்தார் (நிலம் எடுப்பு) அந்தோணிசாமி, மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்துவதற்காக பொக்லைன் எந்திரத்தோடு வந்தனர்.

அப்போது அவர்கள் அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம் கடைகளை காலி செய்து கொடுக்குமாறு கூறினர்.

அதற்கு வியாபாரிகள், எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல் திடீரென்று வந்து கடைகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்றால் நாங்கள் உடனடியாக எப்படி காலி செய்து கொடுக்க முடியும் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

இதையடுத்து நிலம் எடுப்பு தனி தாசில்தார் அந்தோணிசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் கடை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடைகளை காலி செய்ய அவகாசம் வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் ஏற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதிக்குள் கடைகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். அதன்பிறகு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story