இளையான்குடி பகுதியில் நெல் சாகுபடிக்கு மானிய விலையில் விதைகள் வினியோகம் - வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்


இளையான்குடி பகுதியில் நெல் சாகுபடிக்கு மானிய விலையில் விதைகள் வினியோகம் - வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 7 Aug 2019 10:15 PM GMT (Updated: 7 Aug 2019 7:36 PM GMT)

இளையான்குடி பகுதியில் நெல் சாகுபடிக்கு மானிய விலையில் நெல் விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இளையான்குடி,

இளையான்குடி வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இளையான்குடி வட்டாரத்தில் நடப்பாண்டு நெல் சாகுபடிக்கு தேவையான அரசு சான்று பெற்ற நெல் விதைகள் மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்தில் மிக முக்கியமான இடுபொருளாக விதை உள்ளதால் தரமான அரசு சான்று பெற்ற விதைகளையே விவசாயிகள் தேர்வு செய்து விதைக்க வேண்டும். இளையான்குடி வட்டாரத்தில் நடப்பாண்டு நெல்சாகுபடிக்கு தேவையான அரசு சான்று பெற்ற ஆடுதுறை-51 மற்றும் கோ-51 நெல் ரகங்கள் இளையான்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதுமான அளவு இருப்பு உள்ளது.

இதில் கோ-51 என்ற ரகம் ஆடுதுறை 43 என்ற பழைய ரகத்திற்கு மாற்றாக அரசால் வெளியிடப்பட்ட புதிய ரகமாகும். இது 105 முதல் 110 நாட்கள் வரை கொண்ட குறுகியகால ரகமாகும். இவை எக்டருக்கு சராசரியாக 6 ஆயிரத்து 600 கிலோ வரை மகசூல் தரக்கூடியதாகும். இது ஆடுதுறை 43 ரகத்தை விட 11 சதவீதம் கூடுதல் மகசூல் ஆகும். சாதாரணமாக நெல்லை தாக்கும் புகையான், பச்சை தத்துப்பூச்சி, குலை நோய் மற்றும் துங்ரோ என்ற வைரஸ் நோய் ஆகியவற்றின் தாக்கம் இந்த ரகத்தில் குறைவாகவே இருக்கும்.

அதேபோல் ஆடுதுறை-51 என்ற ரகம் 125 முதல் 130 நாட்கள் நடுத்தர வயதுடைய மிக சின்ன ரகம். இவை இலைச் சுருட்டுப்புழு, தண்டுத்துளைப்பான் மற்றும் குலைநோய் ஆகியவற்றிற்கு மிதமான எதிர்ப்பு சக்தி உடையதாகும். மேலும் பழைய நெல் ரகங்களை விடுத்து மாறி வரும் கால நிலைக்கேற்ப மேம்படுத்தப்பட்ட புதிய ரகங்களை விவசாயிகள் மத்தியில் பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் விதை கிராம திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாக 50 சதவீதம் வரை மானிய விலையில் விதை நெல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர குறைந்த தண்ணீரில் நிறைந்த மகசூலை பெற்று மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய ஊக்கமளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நீடித்த மானாவாரி வேளாண்மை இயக்க திட்டத்தின் மூலம் கேழ்வரகு, குதிரைவாலி உள்ளிட்ட விதைகளும் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. எனவே இளையான்குடி வட்டார விவசாயிகள் இளையான்குடியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் அரசு மானியத்துடன் இந்த விதைகளை வாங்கி பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story