மனித கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு


மனித கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 7:57 PM GMT)

மனித கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தெரிவித்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச நீதிக் குழு ஆகியவற்றின் சார்பில் சர்வதேச மனித கடத்தல் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் பெரம்பலூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான லிங்கேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி மலர்விழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், தலைமை நீதித்துறை நடுவர் கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழிப்புணர்வு கருத்தரங்கில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி லிங்கேஸ்வரன் பேசுகையில், மனித கடத்தல் ஒரு கொடுமையான குற்றச் செயலாகும். மனித கடத்தலில் மனிதன் வணிக பொருளாக்கப்பட்டு விற்கப்பட்டு, சுரண்டப்படுகிறான். ஒரு மனிதனை பாலியல் தொழிலுக்காகவும், உழைப்பு சுரண்டுடலுக்காகவும், உடல் உறுப்பு பாகங்களுக்காகவும் கடத்துதல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 370-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

கல்வியின் அவசியத்தை...

இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். மனித கடத்தலுக்கு எதிராக நாம் ஒன்று சேர வேண்டும். மனித கடத்தலை தடுப்பதற்காக நமது மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை குழு உருவாக்கப்பட்டுள்ளது. நம்முடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் இந்த மாதிரியான குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். விழிப்புணர்வு, கல்வியறிவின்மை இல்லாததால் தான் மனித கடத்தல் போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது. கல்வியறிவு மிக, மிக முக்கியம். கல்வியின் அவசியத்தை மனித கடத்தல் தடுப்புக்கான ஒருங்கிணைந்த குழுவினர் கிராமப்புறங்களில் மக்களிடையே உணர்த்தினால் குற்றங்கள் நடைபெறாமல் தடுத்து பெரம்பலூரை குற்றமில்லா மாவட்டமாக மாற்ற முடியும் என்றார். முன்னதாக சர்வதேச நீதிக் குழுவின் சட்ட ஆலோசகர்கள் நாதனியல் சுந்தரராஜ், ரிச்சர்டு எபனேசர் ஆகியோர் சர்வதேச மனித கடத்தல் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

இதில் நீதிபதிகள், அரசு வக்கீல்கள், போலீசார், வருவாய்த்துறையினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா வரவேற்றார். முடிவில் மனித கடத்தல் தடுப்புக்கான ஒருங்கிணைந்த சேவை குழுவின் நிர்வாக அதிகாரி கீதா நன்றி கூறினார்.


Next Story