அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசிநாள்


அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க 20-ந் தேதி கடைசிநாள்
x
தினத்தந்தி 9 Aug 2019 10:45 PM GMT (Updated: 9 Aug 2019 11:20 PM GMT)

அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு வருகிற 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் 2019- 2020-ம் ஆண்டு பயிற்சியில் சேர்வதற்காக இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கலந்தாய்வு மூலம் முதற்கட்ட சேர்க்கை நிறைவு பெற்றது. இதன் முடிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்பிட 2-ம் கட்ட சேர்க்கைக்கு வருகிற 20-ந் தேதி வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலிஇடங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கான காலிஇடங்களுக்கு அந்த இனத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் விண்ணப்பிக்கவில்லை எனில், அந்த இடங்களை மாற்று இனத்தவரைக் கொண்டு நிரப்பிட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இடம் கிடைத்திட வாய்ப்பு உள்ளது.

இதே இணையதளத்தில் எந்தெந்த நாளில், எந்தெந்த இடங்களில் மாவட்ட கலந்தாய்வு நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். கடலூர் மாவட்டத்துக்கான கலந்தாய்வு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோரும் ரூ.500 உதவித்தொகை, விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், பாடப்புத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக் கருவிகள் மற்றும் பயிற்சி நிலையங்களுக்கு சென்று வர இலவச பயண அட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன.

எனவே தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலி இடங்களில் மாணவ-மாணவிகள் சேர்ந்து அரசின் உதவித் தொகையோடு தொழில் கல்வி பயில இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் வருகிற 20-ந் தேதி ஆகும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story