ஹாரன் அடித்ததால் தகராறு கத்தியால் குத்தி ஒருவர் கொலை-செம்பூரில் பயங்கரம்


ஹாரன் அடித்ததால் தகராறு கத்தியால் குத்தி ஒருவர் கொலை-செம்பூரில் பயங்கரம்
x
தினத்தந்தி 9 Aug 2019 11:27 PM GMT (Updated: 9 Aug 2019 11:27 PM GMT)

ஹாரன் அடித்ததால் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் செம்பூரில் நடந்து உள்ளது.

மும்பை,

மும்பை செம்பூர் மனோகர்நகரை சேர்ந்தவர் மனோஜ் (30). இவரது தம்பி தீபக் (29). நேற்று முன்தினம் மதியம் அண்ணன், தம்பி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். வீட்டருகே உள்ள குறுகலான தெருவில் சென்ற போது அந்த பகுதியை சேர்ந்த சந்தீப் (28) மற்றும் அவரது தந்தை பால்சிங் (70) வழியில் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஹாரன் அடித்து உள்ளனர். இதுதொடர்பாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கும், சந்தீப்பின் குடும்பத்தினருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில், அவர்களது சத்தம் கேட்டு மனோஜின் தந்தை மனோகர் (57) அங்கு ஓடி வந்தார். அவர் தகராறில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்ய முயன்றார். அப்போது சந்தீப் அவரை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த மனோகர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் சந்தீப், அவரது தந்தை பால்சிங் மற்றும் தாயார் கிருஷ்ணா (60) மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து திலக்நகர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தகராறில் ஈடுபட்ட 2 குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்திருக்கும் என நினைக்கிறோம். அதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். தகராறின் போது கொலையாளிகளும் காயமடைந்து உள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்த பிறகு அவர்களை கைது செய்வோம்’’ என்றார்.

Next Story