பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு


பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு
x
தினத்தந்தி 10 Aug 2019 10:45 PM GMT (Updated: 10 Aug 2019 7:35 PM GMT)

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முன்பக்க டயர் வெடித்ததால் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

பொம்மிடி,

கேரள மாநிலத்தில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஆந்திர மாநிலத்திற்கு சென்றது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சந்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் மகன் ஸ்ரீதர் (வயது 26) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி நேற்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள காளிப்பேட்டை பகுதியில் சென்ற போது திடீரென முன் பக்க டயர் வெடித்தது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோரம் இருந்த சுமார் 6 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது டிரைவர் ஸ்ரீதர் கீழே குதிக்க முயன்றபோது அவர் லாரிக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக சென்றவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இறந்த ஸ்ரீதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லாரியில் இருந்த பிளைவுட்கள் வேறு லாரி மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story