பவானிசாகர் அணை நீர்மட்டம் 92 அடியை எட்டியது


பவானிசாகர் அணை நீர்மட்டம் 92 அடியை எட்டியது
x
தினத்தந்தி 12 Aug 2019 11:15 PM GMT (Updated: 12 Aug 2019 5:15 PM GMT)

பவானிசாகர் அணை நீர்மட்டம் 92 அடியை எட்டியது.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இந்த அணையின் மூலம் ஏராளமான கிராம ஊராட்சிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகின்றது.

அணையின் மொத்த உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. இந்த அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலை உள்ளது.

கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்வது குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.

நேற்று முன்தினம் மாலை 5 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 705 தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 89.92 அடியாக இருந்தது.

நேற்று மாலை 5 மணி அளவில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 761 கன அடியாக குறைந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 91.92 அடியாக இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 92 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story