கலெக்டர் பேசுவதாக கூறி ஓட்டல் மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது


கலெக்டர் பேசுவதாக கூறி ஓட்டல் மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற பெண் கைது
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 8:13 PM GMT)

கலெக்டர் பேசுவதாக கூறி ஓட்டல் மேலாளரிடம் பணம் பறிக்க முயன்ற வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் காந்தி கிராமம் ஈ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 53). இவர், கரூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த ஜூலை 9-ந்தேதி இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் தான் மாவட்ட கலெக்டர் பேசுவதாகவும், விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டியுள்ளதால் ரூ.60,000-ஐ தனது உதவியாளர் வங்கி கணக்கில் செலுத்துமாறு மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த வெங்கடாசலம் இது குறித்து, கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கேட்ட போது தான், ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் கலெக்டர் பெயரை தவறாக மர்ம நபர் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து இது குறித்து கரூர் டவுன் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

பெண் கைது

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, கலெக்டர் பேசுவதாக போனில் தொடர்பு கொண்டு பணம் பறிக்க முயன்றவர்கள் கரூர் பள்ளப்பட்டி ரெங்கராஜ் நகரை சேர்ந்த ஜமாலுதீன் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் காக்காலூர் சக்திநகரை சேர்ந்த ஏ.ஜே.ரோஸ் என்பவரது மகள் ரீட்டா பாபியோலா என்பது தெரிய வந்தது. இதையடுத்து ரீட்டா பாபியோலாவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் போனில் பேசிய முக்கிய குற்றவாளி ஜமாலுதீனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story