முட்புதர்கள் மண்டிகிடக்கும் கந்தசாமிபாளையம் குளத்தை ஆழப்படுத்த வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


முட்புதர்கள் மண்டிகிடக்கும் கந்தசாமிபாளையம் குளத்தை ஆழப்படுத்த வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2019 10:00 PM GMT (Updated: 12 Aug 2019 8:17 PM GMT)

சிவகிரி அருகே முட்புதர்கள் மண்டி கிடக்கும் கந்தசாமிபாளையம் குளத்தை ஆழப்படுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிவகிரி,

சிவகிரி அருகே கொல்லங்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி கந்தசாமிபாளையம். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 9 ஏக்கர் பரப்பளவில் குளம் அமைக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலின் கசிவு நீர் இங்கு தேக்கி வைக்கப்பட்டு பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த குளத்தின் உயரம் குறைவாக உள்ளது. இதனால் 6 அடி உயரத்துக்கு வரை மட்டுமே இந்த குளத்தில் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதன்காரணமாக இந்த குளத்து தண்ணீரை 1 மாதம் வரை மட்டுமே பாசனத்துக்கு பயன்படுத்த முடியும். பின்னர் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘9 ஏக்கர் பரப்பளவில் பாதுகாப்புடன் இந்த குளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த குளத்தின் உயரம் மிகவும் குறைவாக இருப்பதால் குறைந்த அளவிலான தண்ணீரையே இதில் சேமித்து வைக்க முடியும். மேலும் இந்த குளத்தில் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே இந்த குளத்தில் மண்டி கிடக்கும் முட்புதர்களை அப்புறப்படுத்துவதுடன், தூர்வாரி 20 அடி ஆழத்துக்கு மண் எடுக்க வேண்டும். அவ்வாறு குளத்தை ஆழப்படுத்தும் பட்சத்தில் குளத்தில் அதிக அளவில் தண்ணீர் சேமிக்க முடியும். மேலும் கந்தசாமிபாளையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே குளத்தை ஆழப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Next Story