விருத்தாசலம் அருகே, பெண்ணிடம் நகை-பணம் அபேஸ் - போலீசார் விசாரணை


விருத்தாசலம் அருகே, பெண்ணிடம் நகை-பணம் அபேஸ் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Aug 2019 10:00 PM GMT (Updated: 12 Aug 2019 11:31 PM GMT)

விருத்தாசலம் அருகே பெண்ணிடம் நகை-பணத்தை மர்மநபர் அபேஸ் செய்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள இருசாளக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி விருத்தாம்பாள் (வயது 40). இவர் நேற்று முன்தினம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் மீண்டும் இருசாளக்குப்பம் செல்வதற்காக புதுக்கூரைப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஏறி விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

விருத்தாசலம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி பேருந்து நிறுத்தம் அருகே பஸ் சென்றபோது, விருத்தாம்பாள் தான் வைத்திருந்த கைப்பையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பஸ்சில் இருந்து இறங்கி, வேறொரு பஸ்சில் ஏறி புதுக் கூரைப்பேட்டை பேருந்து நிறுத்தத்துக்கு சென்று தேடி பார்த்தார். ஆனால் அந்த கைப்பை கிடைக்கவில்லை.

அப்போது தான் பஸ்சில் வந்த மர்மநபர் யாரோ 3 பவுன் நகையும், ரூ.4 ஆயிரத்தையும் வைத்திருந்த கைப்பையை அபேஸ் செய்து சென்றது விருத்தாம்பாளுக்கு தெரியவந்தது. உடனே அவர் இதுகுறித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நகை-பணத்தை அபேஸ் செய்த மர்மநபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story