சோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி


சோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் - அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
x
தினத்தந்தி 13 Aug 2019 12:15 AM GMT (Updated: 13 Aug 2019 12:00 AM GMT)

சோனியா காந்தி காட்டும் பாதையில் பயணிப்போம் என்று புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைவரையும் அரவணைத்து அன்பு காட்டும் அன்னை, காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டிக்காத்து வழிநடத்திய தியாக தலைவி சோனியாகாந்தியை மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காங்கிரஸ் பேரியக்கத்திற்கு சோதனை வந்தபோதெல்லாம் தன்னுடைய சாதுரிய அரசியல் நெறியாள்கை மூலம் சாதனைகளாக மாற்றி காட்டிய சரித்திர தலைவி சோனியாகாந்தி. சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி போன்ற மாபெரும் சக்திகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் பேரியக்கத்தை புதுப்பொலிவுடன் வழிநடத்தி வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார்கள் என்கிற நம்பிக்கை எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

மதவாதத்தை தூண்டி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்த ஜனநாயக குரல் வளையை நெரித்து சர்வாதிகார ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அரசை நாட்டைவிட்டு அப்புறப்படுத்த சோனியாகாந்தி தலைமை ஏற்று ஒன்றிணைந்து அனைவரும் பாடுபடுவோம்.

சமதர்ம சமத்துவ இந்தியாவை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களையும் சோனியாகாந்தி பாதுகாப்பார் என்ற நம்பிக்கை தற்போது எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது. சோனியாகாந்தி காட்டும் பாதையில் பயணித்து காங்கிரஸ் பேரியக்கத்தை கண் துஞ்சாது புதுவை பிரதேச காங்கிரஸ் என்றென்றும் காத்து நிற்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

Next Story