சாமி ஊர்வலத்தின்போது வாகனத்தை ஓரமாக நிறுத்த சொன்ன தாய், மகனுக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது


சாமி ஊர்வலத்தின்போது வாகனத்தை ஓரமாக நிறுத்த சொன்ன தாய், மகனுக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2019 10:00 PM GMT (Updated: 13 Aug 2019 7:44 PM GMT)

சாமி ஊர்வலத்தின் போது வாகனத்தை ஓரமாக நிறுத்த சொன்ன தாய், மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கீழ்மணம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 29). நேற்று முன்தினம் அந்த பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் சாமி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது சரவணனின் வீட்டுக்கு முன்பு வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சாமி ஊர்வலம் வருவதை அறிந்த சரவணன் தன் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். அப்போது அங்கு இருந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (32), சரவணனிடம் தகராறில் ஈடுபட்டு தன்னுடைய சகோதரரான ராஜேஷ் (28), உறவினரான கார்த்திக் (22) ஆகியோர் சரவணன் வீட்டுக்குள் நுழைந்து அவரை தகாத வார்த்தையால் பேசி கத்தியால் குத்தி உள்ளனர்.

இதை தடுக்க வந்த சரவணனின் தாயார் பிட்லா (50) வையும் தாக்கி கத்தியால் குத்தி உள்ளனர். இதில் காயம் அடைந்த தாய், மகன் இருவரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சரவணன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், ராஜேஷ், கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கீழ்மணம்பேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தன்னுடைய வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன், குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், அவரது சகோதரர் ஜீவன், தந்தை குமார் ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அங்கு இருந்த ராஜேசின் உறவினரான சுரேஷ், சுகந்தி ஆகியோரை தகாத வார்த்தையால் பேசி கத்தியால் குத்தியுள்ளனர். மேலும் அவர்கள் சுகந்தியின் சேலையை இழுத்து மானபங்கம் செய்துள்ளனர். இது குறித்து வெள்ளவேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சரவணன், ஜீவன், குமார் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story