தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் - புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி


தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் - புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி
x
தினத்தந்தி 13 Aug 2019 10:15 PM GMT (Updated: 13 Aug 2019 8:53 PM GMT)

‘வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன்’ என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணிக்கட்சி வேட்பாளரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் வேலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் நூலிலையில் வெற்றி பறிபோனது. 4 லட்சத்து 77 ஆயிரம் மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்துள்ளனர். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. அதேபோன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர், அமைச்சர்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள் கிறேன்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. பல்வேறு தொகுதிகளில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இங்கு 8,142 வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றனர். குடியாத்தம், அணைக்கட்டு, கே.வி.குப்பம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை இது வெற்றி பெற்ற தொகுதியாகவே கருதப்படுகிறது. 2014-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு சுமார் 3½ லட்சம் வாக்குகள் பெற்றேன். இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டேன். வெற்றி வாய்ப்பு இருந்தும், அதனை நூலிலையில் இழந்து இருக்கிறேன். தேர்தல் பிரசாரத்தின்போது நான் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். வேலைவாய்ப்பு முகாம், மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்துவேன். அவை வேலூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும். மக்கள் என்னை கைவிட்டாலும், நான் மக்களை கைவிடுவதில்லை.

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தேர்தலில் எதிரொலித்தது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வாக்கு சதவீதம் 47 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் பழனி, வேலூர் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட பொருளாளர் மூர்த்தி மற்றும் கூட்டணிக்கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

Next Story