சூளகிரி அருகே நடத்தையில் சந்தேகம், பெண் சரமாரியாக வெட்டிக்கொலை - கணவர் கைது


சூளகிரி அருகே நடத்தையில் சந்தேகம், பெண் சரமாரியாக வெட்டிக்கொலை - கணவர் கைது
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 9:25 PM GMT)

சூளகிரி அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பெண் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த பொன்னல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் முனிவெங்கடப்பா (வயது 48). இவரது மனைவி சின்னம்மா தேவி (40). இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் சின்னம்மா தேவியின் நடத்தையில் முனிவெங்கடப்பாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முனிவெங்கடப்பா பீர்பள்ளி பகுதியில் உள்ள முருகன் என்பவரது மாந்தோட்டத்தில் மனைவி சின்னம்மா தேவியை, தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். மாந்தோப்பில் சின்னம்மா தேவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த கொலை குறித்து அவர்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னம்மாதேவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய முனிவெங்கடப்பாவை தேடி வந்தனர்.

இதற்கிடையே போலீஸ் தேடிய முனிவெங்கடப்பா கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story