குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - தியாகதுருகத்தில் பரபரப்பு


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - தியாகதுருகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 11:02 PM GMT)

தியாகதுருகத்தில் குடிநீர் வினியோகம் செய்யக் கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறு தண்ணீரின்றி வறண்டது.

இதனால் இப்பகுதி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த ஜூன் மாதம் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய செயல் அலுவலர் (பொறுப்பு) ஜெயராமன், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஆனால் இதுவரை குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் அருகில் உள்ள விளை நிலங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து முறையிடுவதற்காக, பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு செயல் அலுவலர் இல்லாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், பேரூராட்சி அலுவலகம் முன்பு தியாகதுருகம்- உளுந்தூர்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், பேரூராட்சி இளநிலை உதவியாளர் செந்தில்குமார், குடிநீர் திட்ட பணியாளர்கள் கண்ணன், வெங்கடேசன் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமன் அலுவலக பணி காரணமாக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விட்டதாகவும், இன்னும் 10 நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதுவரை டேங்கர் வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் தியாகதுருகம்- உளுந்தூர்பேட்டை சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story