இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது - குறிஞ்சிப்பாடியில் பரபரப்பு


இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது - குறிஞ்சிப்பாடியில் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 11:02 PM GMT)

குறிஞ்சிப்பாடியில் காதலித்தபோது ஒன்றாக எடுத்துக்கொண்ட படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

குறிஞ்சிப்பாடி,

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மணல் அகரத்தை சேர்ந்தவர் கலையழகன். இவருடைய மகன் சிவஞானசம்பந்தம்(வயது 31). இவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் படித்த இளம்பெண் ஒருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு, அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்தனர். அதன்படி கடந்த மாதம் 30-ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இளம்பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்தது.

இது பற்றி அறிந்ததும் ஆசிரியர் சிவஞானசம்பந்தம், மாப்பிள்ளை வீட்டாரிடம் அந்த இளம்பெண் பற்றி அவதூறாக கூறியுள்ளார். மேலும் காதலித்தபோது இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட படத்தையும், மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதில் மனமுடைந்த அந்த இளம்பெண், வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே இளம்பெண்ணின் தந்தை, ஆசிரியர் சிவஞானசம்பந்தத்தை சந்தித்து நியாயம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவஞானசம்பந்தம், உனது மகளை வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இது குறித்து மாணவியின் தந்தை, குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவஞானசம்பந்தத்தை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story