குமாரபாளையத்தில், தொழிலாளி வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை


குமாரபாளையத்தில், தொழிலாளி வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 11:03 PM GMT)

குமாரபாளையத்தில் தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராகவேந்திரா வீதியில் உள்ள ஒரு வீட்டில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில், இறந்தவர் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் (வயது 45) என்பதும், அவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராகவேந்திரா வீதி பகுதியில் தங்கி ஒரு தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், கனகராஜ் கடந்த சில ஆண்டுகளாக தனது குடும்பத்தினரை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தான் அவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதைத் தொடர்ந்து கனகராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கனகராஜிக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இது தொடர்பாக அவருக்கும், மற்றொரு நபருக்கும் பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் தொழிலாளி அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story