நிலச்சரிவில் சிக்கி மாயமான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி - ஆ.ராசா எம்.பி. வழங்கினார்


நிலச்சரிவில் சிக்கி மாயமான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி - ஆ.ராசா எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 5:57 PM GMT)

நிலச்சரிவில் சிக்கி மாயமான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்துக்கான நிதியை ஆ.ராசா எம்.பி. வழங்கி ஆறுதல் கூறினார்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஏராளமான வீடுகள் இடிந்து விட்டது. இதனால் பொதுமக்கள் முகாம்களில் தங்கி உள்ளனர். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பவில்லை. இந்த நிலையில் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் மழைவெள்ள சேதங்கள் ஏற்பட்ட இடங்களை ஆ.ராசா எம்.பி. நேற்று பார்வையிட்டார்.

பாலவாடி, சூண்டி, பார்வுட், கல்லறைமூலா, சேரன் நகர் வரை சென்று நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களை கண்டார். தொடர்ந்து இடிந்த வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆ.ராசா உறுதி அளித்தார். தொடர்ந்து ஆரோட்டுப்பாறை, சீபுரம், எல்லமலை பகுதிகளில் மழைவெள்ள சேதங்கள் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டார். அப்போது சீபுரம் பகுதியில் நிலச்சரிவில் சிக்கி மாயமான தொழிலாளி சைனூதீனை தேடும் பணி நடைபெறுவதை ஆய்வு செய்தார்.

பின்னர் சைனூதீன் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவியை ஆ.ராசா எம்.பி. வழங்கினார். அப்போது கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் உடன் இருந்தனர். பின்னர் நிருபர்களிடம் ஆ.ராசா கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் நிலச்சரிவு பெருமளவு ஏற்பட்டு உள்ளது. மேலும் மழைவெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 2 நாள் மழைவெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து ஊட்டி, கூடலூர், ஓவேலி பகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. ஓவேலி பகுதியில் உள்ள வனச்சட்டங்களால் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வனத்துறை தடை விதித்துள்ளது.

இதனால் வீடுகளை இழந்த மக்களுக்கு அப்பகுதியில் மீண்டும் வீடுகள் கட்ட மாவட்ட கலெக்டரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தி.மு.க. சார்பில் மழைவெள்ள சேத அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு அரசு உதவி கிடைத்துள்ளது. ஆனால் கிராமப்புறங்களில் அரசு உதவி சென்று சேர வில்லை. இன்னும் மழைவெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட உள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story