மதுகுடித்தபோது தகராறு: கொத்தனாரை அடித்துக்கொன்று தண்டவாளத்தில் உடல் வீச்சு 2 பேர் கைது


மதுகுடித்தபோது தகராறு: கொத்தனாரை அடித்துக்கொன்று தண்டவாளத்தில் உடல் வீச்சு 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Aug 2019 11:15 PM GMT (Updated: 14 Aug 2019 6:36 PM GMT)

மயிலாடுதுறையில், மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை அடித்துக்கொன்று தண்டவாளத்தில் உடலை வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை அவயாம்பாள்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 55). கொத்தனார். இவர், மாப்படுகையில் கட்டிட வேலை செய்து வந்தார். இவருடன் பொன்னூர் வடக்குத்தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ராஜா(30), நரசிங்கன்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சடையாண்டி மகன் செல்வராஜ்(32) ஆகியோரும் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்தவுடன் நாகராஜ், ராஜா, செல்வராஜ் ஆகிய 3 பேரும் ஒன்றாக மது அருந்தினர். பின்னர் அவர்கள் 3 பேரும் மாப்படுகை தண்டவாளம் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், ராஜா ஆகிய இருவரும் சேர்ந்து நாகராஜை தாக்கினர். இதில் நாகராஜ் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாவும், செல்வராஜும் சேர்ந்து நாகராஜ் உடலை இழுத்து சென்று மாப்படுகை வெற்றி விநாயகர் நகர் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு அருகே உள்ள ஒரு புதர் மறைவில் மறைந்து இருந்தனர். அப்போது இரவு 11.15 மணியளவில் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் மாப்படுகை வெற்றி விநாயகர் நகர் உள்ளது. இதனால் ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை என்ஜின் டிரைவர் கவனித்து விட்டார். உடனே என்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்து ரெயிலை நிறுத்தினார். பின்னர் ரெயிலில் இருந்து என்ஜின் டிரைவர் என்ஜினை விட்டு கீழே இறங்கி தண்டவாளத்துக்கு வந்து பார்த்தார். அப்போது தண்டவாளத்தில் ஒருவர் தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

புறப்பட்ட சிறிது தூரத்திலேயே ரெயில் நிறுத்தப்பட்டதால் ரெயிலில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என கருதி மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே போலீசார் ரெயில் நிறுத்தப்பட்ட இடத்துக்கு ஓடிச்சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு ஒருவரை யாரோ அடித்துக்கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசி இருப்பது தெரிய வந்தது. உடனே ரெயில்வே போலீசார் தண்டவாளத்தின் அருகே ரத்தக்கறை படிந்து இருந்த இடத்தை நோக்கி சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு புதர் மறைவில் பதுங்கி இருந்த செல்வராஜும், ராஜாவும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அவர்களை விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் இது குறித்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், செல்வராஜ், ராஜா ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து நாகராஜை அடித்துக்கொன்று உடலை தண்டவாளத்தில் வீசி விபத்து போல சித்தரிக்க முயன்றது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் நாகராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கொத்தனார் ஒருவரை அடித்துக்கொன்று உடல் தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story