கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை


கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 14 Aug 2019 10:15 PM GMT (Updated: 14 Aug 2019 7:56 PM GMT)

கன்னியாகுமரி கடலில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க “ரக்‌ஷா கிரின்“ என்ற பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கியது. இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்றும் 2-வதுநாளாக தொடர்ந்து நடக்கிறது. சுதந்திரதினம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின நிகழ்ச்சியை சீர்குலைக்க கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கன்னியாகுமரி கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படையும், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் இணைந்து சுதந்திர தினத்தையொட்டி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க “ரக்‌ஷா கிரின்“ என்ற பாதுகாப்பு ஒத்திகையை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கினர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி மற்றும் போலீசார் கன்னியாகுமரி முதல் கூடங்குளம் வரையிலும், ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையும் அதிநவீன ரோந்து படகு மூலம் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சோதனைச்சாவடிகளில்...

மேலும், குமரி மாவட்டத்தில் 72 கிலோமீட்டர் தூரம் உள்ள 48 கடற்கரை கிராமங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

Next Story