திருப்புவனத்தில் உரிமையியல், நீதித்துறை கோர்ட்டு; முதன்மை நீதிபதி கார்த்திகேயன் திறந்து வைத்தார்


திருப்புவனத்தில் உரிமையியல், நீதித்துறை கோர்ட்டு; முதன்மை நீதிபதி கார்த்திகேயன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 8:22 PM GMT)

திருப்புவனத்தில் கட்டப்பட்டுள்ள உரிமையியல் மற்றும் நீதித்துறை கோர்ட்டை மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் திறந்துவைத்தார்.

திருப்புவனம்,

திருப்புவனத்தில் கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கு பலனாக அங்குள்ள அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கோர்ட்டு கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன. இந்தநிலையில் கோர்ட்டு கட்டிட பணிகள் முடிவடைந்து நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கோர்ட்டை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- திருப்புவனத்தில் கோர்ட்டு அமைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி அரசு பெண்கள் பள்ளியில் உள்ள பழைய கட்டிடத்தை புதுப்பித்து கோர்ட்டு போல் அமைக்க மாவட்ட கலெக்டரிடம் வற்புறுத்தப்பட்டது. அனைத்து முயற்சிக்கும் மாவட்ட கலெக்டர் முழு ஒத்துழைப்பு வழங்கியதுடன், சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர்களையும் அழைத்து கட்டிட பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்தார். அதன்பேரில் தற்போது கோர்ட்டு திறக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கறிஞர் களுக்கு ஓய்வு அறை, நூலக கட்டிடம் அமைக்க ஆவணம் செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ஊர் கூடி இழுத்தால் தான் தேர் நகரும். அதுபோல் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைத்து கோர்ட்டு பெருமையை காக்க வேண்டும். இந்த கோர்ட்டு முன்மாதிரி நீதிமன்றமாக செயல்பட வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடாமல், நீதிமன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். மேலும் வழக்குகள் தேங்காமல் விரைவாக முடித்து நீதி வழங்க இந்த கோர்ட்டு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நீதிமன்றம் திறப்பு விழா கலெக்டர் ஜெயகாந்தன், போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன்,மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் மோகன்குமார், சிவகங்கை மூத்த வக்கீல் மோகனசுந்தரம் ஆகியோர் பேசினர். முன்னதாக அனைவரையும் வக்கீல் சேதுராமச்சந்திரன் வரவேற்றார். விழாவில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி செம்மல், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பாபுலால், குடும்ப நல நீதிபதி தமிழரசி மற்றும் மாவட்ட அனைத்து நீதிபதிகள், திருப்புவனம் பகுதி வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் திருப்புவனம் கோர்ட்டின் நீதிபதியாக அச்சுதன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பல வழக்குகள் மீது விசாரணை நடைபெற்றது.

Next Story