துறையூரில் பட்டப்பகலில் துணிகரம்: பெண்ணிடம் 10 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


துறையூரில் பட்டப்பகலில் துணிகரம்: பெண்ணிடம் 10 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:15 PM GMT (Updated: 14 Aug 2019 9:02 PM GMT)

துறையூரில் நடந்து சென்ற பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றனர்.

துறையூர்,

துறையூர் முத்துநகரில் வசித்து வருபவர் அய்யனார். இவருடைய மனைவி செல்லபாப்பு (வயது 56). இவர், நேற்று காலை 11 மணி அளவில் துறையூரில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், செல்லபாப்பு கழுத்தில் அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பிடித்து இழுத்தனர். உடனே, சுதாரித்து கொண்ட அவர் தாலிச்சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவர்களுடன் போராடினார். ஆனாலும், அவர்கள் 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். செல்லபாப்புவின் கையில் தாலி மட்டுமே மிஞ்சியது.

போலீசார் வலைவீச்சு

இதுகுறித்து துறையூர் போலீசில் செல்லபாப்பு புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் பெண்ணிடம் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். துறையூரில் கடந்த சில மாதங்களாகவே சங்கிலி பறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம ஆசாமிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபவதாகவும், பதிவு எண் இல்லாததால் மோட்டார் சைக்கிளின் எண்களை பார்க்க முடியவில்லை என்றும், போலீசார் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story