நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது; கோவில் வளாகத்தில் பிரசவம் பார்த்த டாக்டர்கள்


நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது; கோவில் வளாகத்தில் பிரசவம் பார்த்த டாக்டர்கள்
x
தினத்தந்தி 14 Aug 2019 11:00 PM GMT (Updated: 14 Aug 2019 9:39 PM GMT)

நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்த கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. கோவில் வளாகத்திலேயே டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் வைபவம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. அத்தி பூத்தாற்போல வந்திருக்கும் அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, பயபக்தியுடன் மனம் உருக சிம்ம சொப்பனமாக திகழும் அத்திவரதரை பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கிறார்கள்.

இந்தநிலையில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பாணவரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி விஜயா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான இவர், அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக நேற்று காலை தனது குடும்பத்தோடு வந்திருந்தார். கடுமையான கூட்ட நெரிசலில் நீண்ட வரிசையில் நின்றவாறு விஜயாவும் ஒருவழியாக அத்திவரதரை தரிசனம் செய்தார்.

தரிசனம் முடிந்து கோவில் வளாகத்தில் வந்துகொண்டிருந்தபோது, விஜயாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்த பெண் பக்தர்கள், விஜயாவை கோவில் வளாகத்தில் உள்ள பதினாறு கால் மண்டபம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமுக்கு மெதுவாக அழைத்துச்சென்றனர். விஜயாவை முகாமில் அனுமதித்த உடனேயே ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கவுதம், செவிலியர் யோகவள்ளி ஆகியோர் பிரசவத்துக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் முகாமில் உள்ள டாக்டர்கள் விஜயாவுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது சுகப்பிரசவத்தில் விஜயாவுக்கு 3 கிலோ எடையுடன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவ முகாமை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். விஜயாவும், அவருடைய குழந்தையும் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

விஜயாவுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தை உள்ள நிலையில், அத்திவரதரை தரிசனம் செய்த பிறகு, 3-வதும் ஆண் குழந்தையாக பிறந்ததால் விஜயா மற்றும் அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

Next Story